திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.106 திருவலஞ்சுழி பண் - பழம்பஞ்சுரம் |
பள்ளம தாய படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ளம் உருக உணருமின்கள் உறுநோ யடையாவே.
|
1 |
காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேற்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழையந் நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே.
|
2 |
பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநூல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ உரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே.
|
3 |
விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை அறியோமே.
|
4 |
கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே.
|
5 |
தண்டொடு சூலந் தழையவேந்தித் தைய லொருபாகங்
கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியின் உரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற தொடர்பைத் தொடர்வோமே.
|
6 |
கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதில் மூன்றும்செற்ற சுடரான் இடர்நீங்க
மல்லிய லுந்திரள் தோளெம்மாதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கிஏத்தி யிருப்பவர் புண்ணியரே.
|
7 |
வெஞ்சின வாளரக் கன்வரையை விறலா லெடுத்தான்றோள்
அஞ்சுமோ ராறிரு நான்குமொன்றும் அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே.
|
8 |
ஏடியல் நான்முக கன்சீர்நெடுமா லெனநின் றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழகர் உலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயஎம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே.
|
9 |
குண்டரும் புத்தருங் கூறையின்றிக் குழுவார் உரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற கழலான் அழலாடி
வண்டம ரும்பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன்எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே.
|
10 |
வாழியெம் மானெனக் கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் தமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லார் அவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரும் இன்பமோக்கும் உருவும் உயர்வாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |